மக்கள் நேர்மையானவர்களா?
ஒருநாள்
அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம்,
“எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள்
கருத்து என்ன?” என்று கேட்டார்
உடனே சபையிலிருந்த அனைவரும் “ஆம் அரசே… உங்கள்
பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே
முடியாது.” என்றனர்.
ஆனால்
பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன்
மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?”
என்று கேட்டார். உடனே பீர்பால், “இதற்கு
நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய
வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும்
நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால்
கொண்டு வர வேண்டும் என்று
உத்தரவிட வேண்டும்,” என அக்பரிடம் வேண்டுகோள்
வைத்தார்.
பீர்பால்
கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை
உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி
பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
தண்டோரா
போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், “நமது பேரரசர் அனைவருக்கும்
விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால்
கொண்டு வர வேண்டும். இது
அரசு உத்தரவு, ” என்று உரத்த குரலில் அறிவித்தார்.
இதைக்
கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், “அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல
வேண்டும், ” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், “சரி ஒரு குடம்
பால் தானே…கொண்டு போய்
என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
அரசர்
அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர்,
பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான
வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது.
மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது.
பொதுமக்கள்
அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த
பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், “நீ சொன்னபடி செய்தாகிவிட்டது
பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?”
என்று கேட்டார்.
உடனே
பீர்பால் காவலர்களைப் பார்த்து, “பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்” என உத்தரவிட்டார்.
பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச்
சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப்
பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“பீர்பால்…என்ன இது, பால்
இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?” என அதிர்ச்சி மாறாமல்
கேட்டார்.
ஆனால்
இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய
பீர்பால், “மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும்,
நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால்
யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம்
முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக்
கேட்டு எந்த முடிவுக்கும் வந்து
விடக்கூடாது அரசே..” என்று சிரித்தபடியே கூறினார்.
பீர்பாலின்
அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக