காவல்காரர்கள் பெற்ற பரிசு
ஒருநாள்,
சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில்,
அவரை நாடி ஓர் இளைஞன்
அங்கு வந்தான். அவன் அக்பரை பணிவுடன்
வணங்கியபோது, அக்பர் அவனை நோக்கி, “நீ
யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?” என்று
கேட்டார்.
“பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!” என்றான் அவன்.
“உனக்கு
யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?” என்று
அக்பர் கேட்டார்.
“என்
ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய
வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார்.
அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம்
காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்” என்றான் மகேஷ்.
“எல்லா
ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே
நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!” என்றார்
அக்பர்.
“பிரபு!
நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு
தகுதியுடையவன் நான்!” என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.
“அப்படியானால்,
அதை நிரூபித்துக் காட்டு!” என்றார் அக்பர்.
“பிரபு!
அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு
பரிசு தருவீர்களா?” என்று மகேஷ் கேட்டான்.
“முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!” என்றார் அக்பர்.
“நான்
கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட
செலவாகாது!” என்றான் மகேஷ்.
“அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?” என்றார் அக்பர்.
“முப்பது
சவுக்கடி கொடுங்கள்!” என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக்
கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.
“உனக்கென்ன பைத்தியமா?” என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.
“அதைப்
பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான்
வேண்டியதைக் கொடுங்கள்!” என்றான் மகேஷ்.
உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து
வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் “அவனை
அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!”
என்றார்.
மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை “நீ அடிக்கத் தொடங்கு!” என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் “நிறுத்து!” என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, “பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!” என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், “என்ன உளறுகிறாய்?” என்று
கோபத்துடன் கேட்டார்.
அவர்களையே்
கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, “தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு
பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு
விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்”
என்றான்.
இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி, “இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!” என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், “நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக