வெயிலும், நிழலும்
அன்று
சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே
எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார்.
“எப்போது
சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிது
இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார்.
“அதற்கு சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் விகாரமாக மாறிவிடுகிறது!
அதனால்…”
பீர்பலை இடைமறித்த அக்பர் “என்ன தைரியம் இருந்தால்
என்னை சிடுமூஞ்சி என்றும் விகாரமானவன் என்றும் குறிப்பிடுவாய்? இனி, உன் முகத்தில்
விழிக்க நான் விரும்பவில்லை! எங்காவது
கண்காணாத இடத்திற்கு ஒழிந்து போ!” என்றார். இதைக்
கேட்டு மனமுடைந்த பீர்பல் உடனே அந்த இடத்தை
விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த
நாள் அக்பர் தர்பாருக்கு வந்ததும் சபையில் பீர்பல் மட்டும் காணப்படாததை கவனித்த அக்பர் அவரைப்பற்றி விசாரித்தார். தர்பாரில் ஒருவர் எழுந்து நின்று, “பிரபு! நேற்று நீங்கள் அவர்மீது கோபமுற்று இந்த நகரத்தை விட்டுக்
கண்காணாத இடத்திற்குச் சென்று விடுமாறு கட்டளையிட்டீர்களாம்!
அதனால் பீர்பல்
தலைநகரை விட்டுச் சென்று விட்டார்!” என்றார். “அடடா! பீர்பல் உண்மையாகவே சென்று விட்டாரா?” என்று அக்பர் வருந்தினார். தான் அவ்வளவு கடுமையாகத்
பேசியிருக்கக்கூடாது என்று உணர்ந்த அக்பர் தன் தவறுக்காக வருந்தினார்.
பீர்பலை
மீண்டும் சந்திக்க வேண்டுமென்று அவர் மனம் அடித்துக்
கொண்டது. ஆனால் பீர்பல் எங்கு சென்று விட்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று முழுவதும் பீர்பல் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது பற்றியும், அவரை எவ்வாறு மீண்டும்
திரும்பி வரவழைப்பது என்றும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த அக்பருக்கு, இறுதியாக ஒரு யோசனை தோன்றியது.
உடனே
அவர் மந்திரியை அழைத்து “மந்திரியாரே! கொளுத்தும் நடுப்பகல் வெயிலில் குடையின்றி ஒருவன் பிரதான சாலையில் நடந்து வரவேண்டும். அப்படி வருபவனுக்கு நூறு பொற்காசுகள் தரப்படும்
என்று ராஜ்யமெங்கும் தண்டோராப் போடுங்கள்!” என்றார்.
“பிரபு!
இப்போது கடுங்கோடை காலம்! குடையில்லாமல் அரை மணிநேரம் நடந்தாலும்
நடப்பவன் சுருண்டு விழுந்து விடுவான். அப்படிஇருக்க யார் தங்கள் உயிரை
நூறு பொற்காசுக்காக விட முன்வருவார்கள்?” என்றார்.
“நான் சொல்வது போல் தண்டோராப் போட்டு
அறிவியுங்கள்! போதும்!” என்றார் அக்பர். உடனே மந்திரியும் அக்பரின்
விருப்பப்படி ராஜ்யமெங்கும் தண்டோராப் போட்டு அறிவித்தார்.
அக்பரின்
அறிக்கையைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியமமுற்றனர். “சக்கரவர்த்திக்கு என்ன இப்படி ஒரு
வினோதமான ஆசை? இந்த சவாலை
யார்தான் ஏற்பார்கள்?” என்று தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள். தலைநகருக்கு அருகேயிருந்த ஒரு சிறிய கிராமத்தில்
வசித்து வந்த ஒரு பரம
ஏழை இந்த செய்தியைக் கேட்டு
பரபரப்படைந்தான்.
வாழ்க்கையில்
பொற்காசுகளையே பார்த்திராத அவன் ஒரே சமயத்தில்
நூறு பொற்காசுகள் கிடைக்கும் என்ற அறிக்கை அவன்
ஆசையைத் தூண்டியது. அந்தத் தொகை மட்டும் கிடைத்தால்,
அவனுடைய ஏழைமை பரிபூரணமாக விலகிவிடும்.
அதைப்பற்றி
அவன் தன் மனைவியிடம் விவாதித்த
போது, அவள், “நமக்குப் பக்கத்து வீட்டில் சில நாள்களுக்கு முன்
குடிவந்துஇருக்கும் வீரேந்திரனைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் அதிபுத்திசாலியாகக் காணப்படுகிறான். அவன்
நிச்சயம் இதற்கு ஏதாவது ஒருவழி கூறுவான்” என்றாள்.
அவ்வாறே
அவன் தன்னுடையப் பக்கத்து வீட்டுக்காரனான வீரேந்திரனை யோசனை கேட்டவுடன் அவன் உடனே, “அது
ஒன்றும் கஷ்டம்இல்லையே! நீ ஒரு நாற்காலியை
அல்லது சோபாவைத் தலைக்கு மேல் சுமந்து போ!
உன் மேல் வெயில்படாது!” என்று
வீரேந்திரன் கூறினான்.
“ஆகா!
என்ன அருமையான யோசனை? இது ஏன் யாருக்குமே
தோன்றவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் கூவிய அந்த ஏழை, “நான்
நீ கூறியவாறு நாளைக்கே தலைநகர் ஆக்ராவிற்குச் செல்லப் போகிறேன்” என்றான். அவ்வாறே மறுநாள் கிளம்பிய அவன் தலைக்குமேல் ஒரு
சிறிய சோபாவைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே அக்பரின் தர்பாரை அடைந்தான்.
“பிரபு!
குடை இல்லாமலே கொளுத்தும் வெயிலில் என் கிராமத்தில் இருந்து
இங்கு கால்நடையாக வந்துதிருக்கிறேன்!” என்று பரபரப்புடன் அறிவித்தான். “சபாஷ்! யாருக்குமே தோன்றாத இந்த யோசனை உனக்கு
மட்டும் எப்படித் தோன்றியது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்டார்.
“பிரபு!
உண்மையில் எனக்கு இந்த யோசனையை சொல்லிக்
கொடுத்தது என் பக்கத்து வீட்டுக்கார
வீரேந்திரன்!” என்றான் ஏழை! அது பீர்பல்
தான் என்றும் யூகித்துக் கொண்ட அக்பர் தன் திட்டம் பலித்ததையெண்ணி
மிக மகிழ்ச்சியுற்றார். நான் அறிவித்தபடியே உனக்கு
நூறு பொற்காசுகள் தருகிறேன். அந்தப் பணத்தை உன் கிராமத்திற்கு பத்திரமாக
எடுத்துச் செல்ல உன்னுடன் இரு காவலர்களையும் அனுப்புகிறேன்.
நீ
உன் வீட்டை அடைந்ததும், அந்த புத்திசாலி வீரேந்திரனை
காவலர்களிடம் ஒப்படைத்து விடு!” என்றார். அவ்வாறே மிக்க மகிழ்ச்சியுடன் அந்த ஏழை இருவீரர்களின்
துணையுடன் தன் வீட்டை அடைந்தான்.
அவன் அடையாளம் காட்டிய வீரேந்திரனைக் காவலர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆக்ரா திரும்பினர்.
தர்பாரில்
நுழைந்த வீரேந்திரன் தன் முகத்தை ஒரு
பையினால் மூடிக் கொண்டு வந்தான். “வீரேந்திரா! உன் முகத்தை ஏன்
மூடிக் கொண்டிருக்கிறாய்? பையை அகற்று!” என்றார்
அக்பர். “பிரபு! நான் வீரேந்திரன் இல்லை!
நான்தான் பீர்பல்! உங்கள் முகத்தில் இனி நான் விழிக்கக்
கூடாது என்ற உங்கள் கட்டளைப்படியே
நான் எனது முகத்தை மூடிக்கொண்டு
வந்து உள்ளேன்!” என்றான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக